இருபெரும் நாட்டிற்கு இடையே பெரும்போர்
ஒருவர் இறப்பின் இருவரும் இறப்பர்
வெற்றியும் தோல்வியும் கிடையாது - இது
ஒற்றுமையில் வேற்றுமை காணும் போர்
படையினர் எவரும் இலர் எனினும்
தடைகள் பலவும் உள - இதனை
மதியைக் கொண்டு வெல்ல நினைப்பின்
சதியை அதுவே செய்வதை உணர்வீர்.
போர் நிகழ்வது இங்கே - எனது
மனதிற்கும் மனதிற்கும் இடையே !
எண்ணம் போலச் செயலெனக் கூறுவர்
நன்மை நினைப்பின் செயலும் நன்மை
தீமை நினைப்பின் செயலும் தீமை
இரண்டும் இருப்பின் செயலெத் தன்மை ?
எந்தன் மனமோ பிரிந்தது இரண்டாய்
ஒன்றோ நல்வழிச் செல்கிற தெனினும்
ஏனையது தீமையை நாடிச் செல்வதைத்
தவிர்க்க இயலாமல் தவிக்கின்றேன் நான்.
விதியை மதியால் வெல்ல நினைக்குமென்
மதியே எனக்கு விளங்க வில்லை.
இன்பம் சிலநொடி நிலவ, மறுநொடி
துன்பம் மனதில் நிலைகொள் கிறதே.
மலையதன் சிகரத்தில் நிற்கும் நானோ
ஆழ்கடல் அடியில் தவிக்கின் றேனே.
அகம்தனில் தானோ குற்றம் அல்லது
புரம்தனிலோ என நானறி யேனே.
நேற்றைய நிகழ்வை எண்ணி வருந்தி
நாளைய நிகழ்வை எண்ணி பயந்து
இன்றைய நிகழ்வில் கவனம் இல்லாது
என்னை நானே அழிக்கின் றேனே.
நிலையாய் எதையும் நினைக்காமல் என்மனம்
மலையென ஒருகணம் விளங்க மறுகணம்
மடுவாய் சுருங்கி விடுவது ஏனோ ?
நானே ஒருவன் தானோ அல்லது
எனக்குள் இருவர் உளரோ அவருள்
ஒருவர் மகிழ்வில் திளைப்பினும் மற்றவர்
துன்பத்தில் தவிக்கும் மனிதனோ என
விளங்க வில்லை ஒருங்கே எனக்கு
என்னுள் நிகழும் போராட்டம் இதுவே :
"நானும் இங்கே வருந்தி வாடிட
உனக்கு அங்கே நீராட்டோ ?
பலரும் என்னை இங்கே இகழ்ந்திட
உனக்கோ புகழே பொழிகிறதோ ?
என்னை நானிங்கு அழித்துக் கொள்ள
நீயோ அங்கே வளர்வாயோ ?
நானோ இங்கே மூழ்கும் தருணம்
நீயோ அங்கே பறப்பாயோ ?
அசுரர்கள் என்னை அழித்திட உன்னை
அரசர்கள் அழைத்து வாழ்த்தினரோ ?"
இதுபோல் ஒருமனம் மறுமனம் வினவ
விடையும் அறியாது தவிக்கின்றேன்
அகமெது புறமெது புரியவில்லை
வெண்மை கருமை வேற்றுமையில்லை
ஞாயிறு திங்கள் இரண்டுமில்லை
அல்லும் பகலும் மாறவில்லை
புகழும் இகழும் பிரிவில்லை
நகரமும் நரகமும் தனித்தில்லை
விண்ணும் மண்ணும் சேரவில்லை
எண்ணும் எழுத்தும் ஒன்றவில்லை
உயிருடன் மெய்யும் இணையவில்லை
இதுபோல் அனைத்தும் வேற்றுமையாய்
எண்ணும் எந்தன் மனமதனை
ஒருநிலைப் படுத்த இயலவில்லை.
சினமது மனதை சிதைத்ததோ
பகையது என்னைப் புதைத்ததோ
என்வினை எதிர்நின்று தடுத்ததோ
பிறர்வினை தானிதன் காரணமோ
பேராசை கண்ணை மறைத்ததோ
நம்பிக்கை சிதைந்து விட்டதோ
இவைபோல் பலப்பல வினாவிற்கு
விடையும் கிடைக்காது போகுமோ ?
ஒருகால் ஒருபாதையில் வைத்து
மறுகால் மறுபாதையில் வைத்து
நானும் இங்கே நிற்கின்றேன்
பாதைகள் பிரிந்து செல்கின்றன
ஒருமனம் ஒருபாதை விரும்ப
மறுமனம் மறுபாதை விரும்ப
பயணம் தொடர இயலாமல்
நடுவில் கிடந்து தவிக்கின்றேன்.
இந்நிலை என்று முடியுமோ
மனங்களும் ஒன்றாய் சேருமோ
பாதையில் ஒன்றில் நானும்
பயணம் தொடர முடியுமோ
வாழ்வில் நிம்மதி வேண்டும்
நல்வழிச் செல்ல வேண்டும்
தீயவை வெல்ல வேண்டும்
தீர்ப்பு சரியாய் எடுக்கவே
நன்மதி ஒன்றும் வேண்டும்
இவற்றை நானும் பெறவே
சேர்ந்து விடுங்கள் - என்
மனமும் மனமும்