Sunday, December 9, 2007

முறிந்த மகுடம்



மாண்டனரோ வீரர் களிறுபடு களத்தில்
வீழ்ந்தனவோ முப்படை குருதிக்கடல் தன்னில்
சுருண்டனவோ குதிரையும் தந்தமுடை யானையும்
கவிழ்ந்ததோ பேரரசன் தன்னுடை நாடு ?

என்றும் வைகறை தவறாமல் எழுந்து
இருள்சூழ் உலகிற்கு கண்பார்வை அளித்து
எழுச்சிதரும் பகலவன் ஏனோ இன்றுமட்டும்
நாள்முழுதும் உறங்கி எழுந்துவர மருத்தானோ ?

கார்மேகம் சூழ்ந்து அசையாது நின்று
மக்கள் மாக்கள் அசையா மரங்கள்
பயங்கருதா மாரி, மென்காற்று வீசியதும்
கலைந்து மறைந்து விட்டானோ வருணன் ?

புழுதிப்புயல் வீசிய பலம்கொண்ட வீச்சில்
கண்கள் மறைத்து முன்நிற்ப தெவரென்று
தெரியாத வண்ணம் ஞாலம் சூழ்ந்து
துயரம் தந்தானோ இன்று வாயு ?

உண்ணுவ தனைத்தும் படைப்பதற் குதவி
பயன்கொண்ட வகையில் இருந்த நன்மைத்தீ
ஏனோ இன்று சினமதிகம் கொண்டு
யாவையும் கரிபோல் உருமாற்றினானோ ?

அல்லது,

துள்ளி குதித்தோடிய கடலதன் அலைகள்
நிலைமாறாது நின்று அமைதி காக்கின்றனவோ ?
மின்னும் விண்மீன் மின்னுவதை விட்டு
எங்கோ விண்ணுள் மறைந்து விட்டதோ ?
நிதிவேண்டா மென்று இறையவன் சந்நிதியை
தஞ்சமடைந்த மானிடனை எமாற்றினானோ தலைவன் ?

உன்னிடம்,

"வீழ்ந்திடு இதுதருணம்" என்றானோ எமன் ?
முற்பிறவி பாவமோ முன்னோர்தம் தீச்செயலோ
அல்லது எவரேனும் தீயோர்கள் தீவினையோ
உன்னைத் துன்புறுத்தி வாட்டுவது ஏதது ?

இவற்றுள்நீ உணர்த்துவது ஏது ? என்மனம்
விடையறியாமல் படும்வேதனை நீயறி வாயோ ?
நல்லெண்ணம் உதிக்காமல் இதுபோன்ற எண்ணம்பல
அல்லும்பகலும் அலை பாய்கின்றன என்னுள்ளதில்
மனமிரங்க முடியாமல் உயிர்தர இயலாமல்
தவிக்கும் எனக்கு விடைதான் ஏது ?

நீ,

அதிகாலை மலர்ந்து நறுமணம் பரப்பி
கடந்து செல்வோர் உள்ளம் கவர்ந்து
வானம்பார்த்து உயர்ந்து நின்று, கம்பீரத்
தோற்றத்துடன் காட்சி தருவாய் உலகிற்கு

என்றும் உனக்கு நீரைக் கொடுத்து
என்று மலர்வாய் எனக்காத்து நின்று
தோன்றிய உடனேயுன் அழகை ரசித்தவர்
இன்றுபடும் வேதனையை அறிவாயோ மலரே ?

மங்கையர் அவர்தம் நீண்ட கூந்தலில்
அழகைப் பெருக்கும் விதத்தில் அமர்ந்து
இன்பம் தரும் நீதானோ இங்கே
அழகிழந்து நிலத்தில் மாண்டு கிடக்கின்றாய் ?

உன்னிடம் பொருந்திய சிவப்பு - அது
இயற்கை அளித்த நிறமோ அல்லது
குருதியின் குறியோ எனத்தெரிய வில்லை
நீயே கூறுதி நின்செம்மை உணர்த்துவதேது ?

உன்னைத் தாங்கும் முள்கொண்ட காம்பு
மறந்து விட்டதோ உன்னை இன்று
காம்பில் இருந்து முறிந்து நீயும்
கீழே விழுந்து கிடக்கின்றாய்
பூமியில் புதைந்து கிடக்கின்றாய்

காலம் உனக்கு முடியவில்லை
எமனும் உன்னை நாடவில்லை
மரணம் உன்னை அழைக்கவில்லை
எனினும் பிரிந்து சென்றுவிட்டாய்
கடவுளர் பாதம் சரண்புகுந்தாய்

உன்னை இனிநான் எங்கு காண்பேன் ?
என்று காண்பேன் ? எப்படிக் காண்பேன் ?
மானிடர் பூமியிலோ ? தேவர் உலகத்திலோ ?
இருள்சூழ் நரகத்திலோ ?
விடையை அளித்துவிடு
ரோஜாவே ...

3 comments:

Anonymous said...

hi there. could you explain this part to me. திக்கெட்டும் சுவர்கள் மட்டுமே இருந்திட
அவற்றுடன் மட்டும் பேசும்நிலை கொடுமை

Unknown said...

You are surrounded by walls on all sides. It indicates that, you have no one else around. You are imprisoned within your own mind, without being able to cry out to someone. All that you can do is to cry out to the walls which are never going to give you any comfort or solace...

Anonymous said...

thanks 4 the explanation