Saturday, June 7, 2008

அது



விண்ணை முட்டும் சிகரமோ அல்லது
மண்ணை நனைக்கும் மாரியோ

தழுவிச் செல்லும் மென்காற்றோ அல்லது
தவழ்ந்து செல்லும் சிற்றாறோ

மலர்ந்து மணம்தரும் மலரோ அல்லது
மலரின் இன்பத் தேனோ

நீரில் நீந்தும் கயல்தானோ அல்லது
நினைவில் நிலைக்கும் பிம்பமோ

எண்ணம் சேர்ந்து எழுத்துரு பெற்ற
இனிய செந்தமிழ்க் கவிதையோ

செவிவழிச் சென்று இதயத்தில் நிலைத்து
மனதிற்கு இன்பம்தரும் இசையோ

அரிதென நினைப்பதை எளிதென மாற்றும்
தளராது செய்யும் முயற்சியோ

உயர்விலும் தாழ்விலும் துணையாய் நின்று
அரணாய்க் காக்கும் நட்போ

மெய்யிரண் டெனினும் உயிரொன் றென்ற
மெய்யான காதல் உணர்வோ

செய்வினை ஈன்ற நிதியோ அல்லது
நல்வினை ஈன்ற புகழோ

எங்கும் எதிலும் நிலைபெற் றிருந்து
என்றும் நம்மைக் காக்கும் இறையோ
அன்று நமக்கு உயிர்தனை அளித்து
இன்றும் உயிராய் விளங்கும் தாயோ

கற்றோர் ஏத்தும் பெரறிவோ அல்லது
கல்லாதோர் தேடும் சிற்றறிவோ - முற்றும்
அறிந்தோர் அறியாத நுண்ணறிவோ - எதுவும்
அறியாதோர் அறிந்த நல்லறிவோ அது

திறக்காத கண்ணில் தெரியும் காட்சியோ
மலராத மலர்தான் பரப்பும் மணமோ
உதிக்காத சூரியனின் ஒளிதரும் கதிரோ
இல்லாத ஒன்றின் இருக்கும் தோற்றமோ

இறையவன் செதுக்கிய சிற்பமோ அல்லது
எந்தன் இதயம் அதனை செதுக்கியதோ
இயற்கை வரைந்த ஓவியமோ அல்லது
எந்தன் மனம்தான் நிறமும் அளித்ததோ

கண்ணில் காட்சி தோன்றவில்லை
நினைவில் எதுவும் நிலைக்கவில்லை
விடையும் எவரும் கூறவில்லை
நானும் நாடிச் செல்லவில்லை
ஏனென நானும் எண்ணியதும்
மனதில் தோன்றியது இதுவே :

மனதிற்கு இன்பம் தருவது அது
துன்பத்தை நீக்கும் மருந்து அது
வாழ்வில் வழிகாட்டும் ஒளிதான் அது
என்றும் துணையாய் இருப்பது அது

எதுவென எண்ணவும் இயலாது
எதுவாயினும் மறக்க இயலாது
தோற்றம் உருவம் கிடையாது
நிறமோ மணமோ கிடையாது

அதனை,
நானும் நினைக்க முயல
மனதில் எதுவும் தோன்றவில்லை
நானும் எழுத முயல
சொற்கள் எதுவும் சேரவில்லை

எதுவாயினும் அதனை விளக்க
எண்ணும் எழுத்தும் எல்லையில்லை
எங்கும் அதற்கு மொழியில்லை

அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் வேரூன்றி நின்று
புரியாத புதிராய் விளங்குவது
அது

Friday, January 4, 2008

தனிமை



பூத்துக் குலுங்கும் மரங்கள் மத்தியில்
ஓரிலை மட்டும் கொண்டதோர் மரம்

கருநிற வானில் நேற்றுபல விண்மீன்
இன்றோ விண்ணில் ஒன்றே மிச்சம்

கூட்டமாய் பறக்கும் பறவைகளுள் ஒன்று
தனியே உலவுகின்றது வானில் இன்று

ஏதும் குறையற்ற வெள்ளைத் தாளின்
நடுவே விளங்குவது கருநிறக் குறி

கதம்பமாய் தொடுத்த மலர் ஆரமதில்
உயிருடன் இருப்பதோ தனிமலர் ஒன்று

பசுமை வயலில் கதிரும் வணங்கிட
தானியம் மட்டும் ஒன்றே உள்ளது

சேர்த்து சேர்த்து இருப்பிடம் கட்டிட
கிடைத்து இருப்பது ஒருதனிச் செங்கல்

இயற்கை அளிக்கும் பாடம் நமக்கு
ஒற்றுமை என்னும் வேதமே ஆகும்
மணக்கும் மலரும் பறக்கும் பறவையும்
ஞாலத்தில் எதுவும் ஒன்றுதான் இருப்பின்
அழகை இழந்து அழிவேற்கும் உலகம்

சுற்றிலும் இருப்ப தனைத்திலும்
முற்றிலும் இறைவன் உளான்
சுற்றிலும் எதுவும் இல்லையேல்
தனியே நீயும் இருப்பின்
இறைவன் இல்லையென் றாகுமோ ?

வருத்தம் பலப்பல மனதில் குமிய
பகிர்ந்து கொள்ள ஒருவரும் இல்லையேல்
இருத்தல் வேண்டாம் உலகிலென எண்ணி
இறத்தலே மேலென எண்ணும்நிலை கொடுமை

திக்கெட்டும் சுவர்கள் மட்டுமே இருந்திட
அவற்றுடன் மட்டும் பேசும்நிலை கொடுமை

தன்னோடு தானே பேசுவதும்
எண்ணங்கள் தாமும் மோதுவதும்
விண்ணும் மண்ணும் பார்த்து
செய்வினை இன்றி தவிப்பதும்
புகழ்ச்சியில் தானும் திளைத்தாலும்
இகழ்ச்சியில் மூழ்கித் தவித்தாலும்
வாழ்வில் துணையென ஒருவர்
இல்லையேல் வாழ்தலே கொடுமை

கொலையும் கொடுமை தீண்டாமை கொடுமை
வறுமை கொடுமை - தற்
பெருமையும் கொடுமை
தீச்சொல் தீச்செயல் கொடுமை
தீயோர் தீவினை கொடுமை
இவற்றினும் கொடுமை ஒன்றும் உண்டெனில்
அதுவே மிகப்பெரும் கொடுமை -
தனிமை