Saturday, June 7, 2008

அது



விண்ணை முட்டும் சிகரமோ அல்லது
மண்ணை நனைக்கும் மாரியோ

தழுவிச் செல்லும் மென்காற்றோ அல்லது
தவழ்ந்து செல்லும் சிற்றாறோ

மலர்ந்து மணம்தரும் மலரோ அல்லது
மலரின் இன்பத் தேனோ

நீரில் நீந்தும் கயல்தானோ அல்லது
நினைவில் நிலைக்கும் பிம்பமோ

எண்ணம் சேர்ந்து எழுத்துரு பெற்ற
இனிய செந்தமிழ்க் கவிதையோ

செவிவழிச் சென்று இதயத்தில் நிலைத்து
மனதிற்கு இன்பம்தரும் இசையோ

அரிதென நினைப்பதை எளிதென மாற்றும்
தளராது செய்யும் முயற்சியோ

உயர்விலும் தாழ்விலும் துணையாய் நின்று
அரணாய்க் காக்கும் நட்போ

மெய்யிரண் டெனினும் உயிரொன் றென்ற
மெய்யான காதல் உணர்வோ

செய்வினை ஈன்ற நிதியோ அல்லது
நல்வினை ஈன்ற புகழோ

எங்கும் எதிலும் நிலைபெற் றிருந்து
என்றும் நம்மைக் காக்கும் இறையோ
அன்று நமக்கு உயிர்தனை அளித்து
இன்றும் உயிராய் விளங்கும் தாயோ

கற்றோர் ஏத்தும் பெரறிவோ அல்லது
கல்லாதோர் தேடும் சிற்றறிவோ - முற்றும்
அறிந்தோர் அறியாத நுண்ணறிவோ - எதுவும்
அறியாதோர் அறிந்த நல்லறிவோ அது

திறக்காத கண்ணில் தெரியும் காட்சியோ
மலராத மலர்தான் பரப்பும் மணமோ
உதிக்காத சூரியனின் ஒளிதரும் கதிரோ
இல்லாத ஒன்றின் இருக்கும் தோற்றமோ

இறையவன் செதுக்கிய சிற்பமோ அல்லது
எந்தன் இதயம் அதனை செதுக்கியதோ
இயற்கை வரைந்த ஓவியமோ அல்லது
எந்தன் மனம்தான் நிறமும் அளித்ததோ

கண்ணில் காட்சி தோன்றவில்லை
நினைவில் எதுவும் நிலைக்கவில்லை
விடையும் எவரும் கூறவில்லை
நானும் நாடிச் செல்லவில்லை
ஏனென நானும் எண்ணியதும்
மனதில் தோன்றியது இதுவே :

மனதிற்கு இன்பம் தருவது அது
துன்பத்தை நீக்கும் மருந்து அது
வாழ்வில் வழிகாட்டும் ஒளிதான் அது
என்றும் துணையாய் இருப்பது அது

எதுவென எண்ணவும் இயலாது
எதுவாயினும் மறக்க இயலாது
தோற்றம் உருவம் கிடையாது
நிறமோ மணமோ கிடையாது

அதனை,
நானும் நினைக்க முயல
மனதில் எதுவும் தோன்றவில்லை
நானும் எழுத முயல
சொற்கள் எதுவும் சேரவில்லை

எதுவாயினும் அதனை விளக்க
எண்ணும் எழுத்தும் எல்லையில்லை
எங்கும் அதற்கு மொழியில்லை

அன்றும் இன்றும் என்றும்
உள்ளத்தில் வேரூன்றி நின்று
புரியாத புதிராய் விளங்குவது
அது

2 comments:

சாவண்ணா Magendran said...

KALANKUNNGA SANKAR...

சாவண்ணா Magendran said...

facinating that you could leave the unidentified in me now ... great.

vaalthukal.