Sunday, June 12, 2011

என்றென்றும் …


கல்லில் செதுக்கியாற்போல் நிலையாய் நின்றாய்
என்றும் மறையாமல் என்னொடு இருந்தாய்
என்நிலை குலைந்து நான்விழும் தருணம்
எனைநின் கரங்களால் தாங்கி நின்றாய்.

இருதயம் இரண்டெனினும் துடிப்போ ஒன்று
பாதை இரண்டெனினும் பயணம் ஒன்று
உள்ளம் இரண்டெனினும் உணர்வோ ஒன்று
மெய்யோ இரண்டெனினும் உயிரோ ஒன்று

உனை நான் தேடினேன் ஞாலமெங்கும்
எனை நான் வருத்தினேன் என்றென்றும்
உனை நான் கண்டேன் என்னுள்ளே
எனை நான் தொலைத்தேன் உன்னுள்ளே

அன்பெனும் சிறையில் அடைத்து வைத்தாய்
பாசமெனும் கயிற்றால் கட்டி வைத்தாய்
சிறையிலிருந்து விடுதலை நான் வேண்டேன்
கயிறுதனை விலக்கிட நான் விழையேன்

நீயும் இருப்பாய் எனைபற் றிடவே
நானும் இருப்பேன் உனையணைத் திடவே
உனைநான் தாங்கிட எனைநீ தாங்கிட
தொடர்வோம் நாம்நம் பயணம் தனையே

No comments: